Showing posts with label தினம் ஒரு கதை. Show all posts
Showing posts with label தினம் ஒரு கதை. Show all posts

Saturday 11 July 2015

The Accident ( Short Story)


போலீஸ்காரரின் போன் அடித்தது
" ஹலோ"
"நீங்க திவ்யாவின் அப்பாவா?"
"ஆமாம். நீங்க"
"நாங்க சாய் ஹாஸ்பிடலிலிருந்து
பேசறோம். உங்க மகளுக்கு ஒரு 
ஆக்சிடெண்ட். உடனே வர முடியுமா?"
பதறியபடி போனார். அங்கே அவர் மகள் ரத்த
வெள்ளத்தில் கிடந்தாள்.
"யாரோ ஒரு பையன். குடிச்சிட்டு வண்டி
ஓட்டிட்டு வந்திருப்பான் போல. வந்தவன்
உங்க மகளோட ஸ்கூட்டில இடிச்சிட்டான்.
ஓவர் ஸ்பீடுங்கறதால் நல்ல அடி. ரெண்டு
பேரயும் பக்கத்தில் நின்றவங்க இங்கே
கொண்டு வந்து சேர்த்தாங்க. "
சொல்லிக்கொண்டே போனாள் நர்ஸ். பைக்
ஓட்டிய பையனை பார்த்த திவ்யாவின்
அப்பா அதிர்ந்தார் 'இவனா?' என
விளரினார்..
சில நிமிடங்களுக்கு முன்...
"ஸ்டாப் ஸ்டாப். ஓரமா பைக்கை நிறுத்து.
குடிச்சிருக்கியா?"
"இல்ல சார்".
"பொய் சொல்லாதே. அதான் வர்ற
வாடையில் எனக்கே போதை வந்திடும்
போல இருக்கே!"
"அது... வந்து.. வந்து..."
"அதான் வந்துட்டியே. அப்புறம் என்ன
வந்து வந்துன்னு உளறுறே.. சரி சரி
எவ்வளவு இருக்கு?"
"சார்..."
"தம்பி ட்ரங்க் அண்ட் ட்ரைவ் தப்புன்னு
தெரியும்ல... அப்புறம் என்ன இருக்கறதை
கொடுத்திட்டு வண்டியை எடுத்துக்க".
" நூறு ரூபாய்தான் சார் கைல இருக்கு"
"பரவாயில்லை. கொடுத்திட்டு போ"
"இந்தாங்க சார்"
நூறு ரூபாயை வாங்கி பாக்கெட்டில்
திணித்தார்.
---
நர்ஸ் கேட்டார் "சார் என்ன சார் யோசனை?
இந்த மெடிசினை வாங்கிட்டு வாங்க
சீக்கிரம்" என்றவாறு ப்ரஸ்கிரிபசனை அவர்
கையில் திணித்தாள் நர்ஸ்.
மருந்தை வாங்குவதற்காக பாக்கெட்டில்
கை விட்டு பணத்தை எடுத்தார். சற்று
முன் அவன் லஞ்சம் கொடுத்த நூறு
ரூபாய் நோட்டும் வெளியே வந்தது.
அதிலிருந்த காந்தி அவரை பார்த்து
சிரித்தது போல தெரிந்தது....!!!
"""" படித்து பிடித்தது """""

Thursday 18 December 2014

Thinam Oru Kadhai(தினம் ஒரு கதை)Message Ulla Kadhai Boss(மெசேஜ் உள்ள கதை பாஸ்)-2

இரவு 11 மணி சாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, டாக்ஸி என கையசைத்து நிறுத்தினார்.
"தம்பி ஆஸ்பத்திரி போகனும்"
"நான் சாப்பிட்டுட்டு, படுக்கப் போற நேரம்"
"என் மகளுக்கு பிரசவ நேரம்ப்பா, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா" என்றார் அப்பெண்மணி.
"நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்" என்றான் அந்த டாக்ஸி ஓட்டும் இளைஞன்.
அப்பெண்மணி 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் கூட தர சம்மதம் என்பதுபோல் வேகவேகமாக தலையாட்டி சம்மதிக்க, டாக்ஸி அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது.
டாக்ஸி ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட் மூடப்பட்டது. அக்கர்ப்பிணியின் முனகல் சற்று அலறலாக மாறியது. நல்ல வேளை அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லை. இரண்டு ரயில் வண்டிகள் எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறந்தது.
இப்போது டாக்ஸி இன்னும் சற்று வேகமாக ஓடி மருத்துவமனையில் நின்றது. நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது அப்பிரசவத் தாயின் அலறல். மூடிய விழிகளில் நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண்டினாள்.
அந்த டாக்ஸி இளைஞனும் அமைதியாக அங்கே நின்றிருந்தான்.
சற்று நேரத்தில் சுகப் பிரசவம்.
"தம்பி! ரொம்ப நன்றிப்பா. இந்தா நீ கேட்ட பணம்" என பணத்தை நீட்டினாள் அப்பெண்மணி.
"வேணாம்மா. எங்கம்மா என்னைப் பெற எவ்வளவு வேதனைப் பட்டிருப்பாங்கன்னு இறைவன் எனக்கு புரிய வச்சிட்டார்.
பணத்தை நீங்களே வைங்க" என்று சொன்னபடி நடக்க
ஆரம்பித்தான்.
ஏதோ யோசிக்க மொபைலை எடுத்து ஒரு நம்பரை கண்டுபிடித்து டயல் பண்ணினான்.
"ஹலோ முதியோர் இல்லமா?"
"ஆமா என்ன இந்த நேரத்துல போன் பண்ணுறீங்க?"
"மன்னிக்கவும். நாளு நாளைக்கி முன்னாடி அனாதைன்னு சொல்லி ஒருத்தவங்கள உங்க இல்லத்துல சேர்த்தேன்.. இல்லையா? அவுங்க அனாதை இல்லை என்ன பெத்த தாய். நாளைக்கு காலையிலே வர்றேன் அவுங்கள கூட்டிட்டு போக"
முதியோர் இல்ல பொறுப்பளரின் அனுமதியைக் கூட கேட்காமல் மொபைலை கட் பண்ணி விட்டு வண்டியை தீர்க்கமான முடிவோடு ஸ்டார்ட் செய்தார் .
'ஆம். நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும்... ஒரு மனிதனைப் பிரசவிக்கிறது'.
------------------------------------நன்றி யாரோ ஒருவர்

Thinam Oru Kadhai(தினம் ஒரு கதை)Message Ulla Kadhai Boss(மெசேஜ் உள்ள கதை பாஸ்)-1

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும்
நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.

மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும்
இருந்தன.
ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச்
செல்லவும்."...
அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது. அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது.
ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்பு இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப்
போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.
அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை.
ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத்
தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க
ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது.
தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரையும் நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனமும் நிறைந்திருந்தது.
நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று
விடலாகாது.
இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது.
"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம்
இன்பமயமாகி விடுமல்லவா?

Popular Posts